அரிய பறக்கும் தவளை, ராஜநாகம் போன்ற பல உயிரினங்கள் கேரளா இடுக்கி மாவட்டம் அடிமாலிக்கு அருகில் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன.
கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற புல்பேந்திரன் என்பவர்தான் இந்த காட்டின் உரிமையாளர். 2015ல் அரசுப் பணியில் இருந்து தன்னார்வ ஓய்வு பெற்ற இவர் சூழல் பணியில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை.
முப்பதாண்டு சூழல் பணி
முப்பதாண்டுகளாக சூழல் பணியில் ஈடுபட்டுள்ள இவருக்கு காடும் வன உயிர்களும் தினசரி வாழ்வின் ஒரு அங்கம். முன்னோர்களிடம் இருந்து பரம்பரை சொத்தாகக் கிடைத்த நிலத்தில் இவர் வனத்தை உருவாக்கியிருக்கிறார். சிறு வயதில் இருந்தே வனத்தையும், வன உயிர்களையும் நேசிக்கும் பண்புடைய இவர் வயதாகும்போது தன் கனவை நனவாக்கியுள்ளார்.
வனங்களுக்கு தோழர்
காலநிலை மாற்றத்தைத் தடுக்க உதவும் காடுகளை அழிப்பதை கடுமையாக இவர் எதிர்த்து வருகிறார். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக காட்டை உருவாக்கவேண்டும் எண்ற எண்ணம் ஏற்பட்டது. இயற்கையைக் காப்பதே மனிதன் செய்யவேண்டிய தலையாய பணி என்பதே இந்த காடு சொல்லும் சேதி.
வனத்திற்குள் ஒரு காட்சி
இன்று நீலகிரி பசுமை உயிர்ச் சமவெளி தாவரவியல் பூங்கா மற்றும் உயிரி ஆய்வு மையம் என்று அழைக்கப்படும் இந்த வனத்தை ஆயிரக்கணக்கான தாவர விலங்கினங்கள் தங்கள் வாழிடமாகக் கொண்டுள்ளன.
இது தவிர தினமும் இங்கு வந்துசெல்லும் உயிரினங்களும் உள்ளன. பார்வையாளர் எவருக்கும் உள்ளே நுழைய அனுமதியில்லை. வெளியில் இருந்து எவரேனும் புதிதாக வந்தால் அது இங்கு வாழும் உயிரினங்களைப் பாதிக்கும் என்பதால் வனத்தைப் பார்க்க எவருக்கும் அனுமதி கொடுக்கப்படுவதில்லை.
காட்டினுள் நானூறுக்கும் மேற்பட்ட அரியவகை மரங்கள் உள்ளன. வனத்தைச் சுற்றிலும் ஈட்டி உட்பட பல மரங்களைக் கொண்ட உயிர்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
தவளைகளுக்காக ஏழு குளங்கள்
அறிவியல் ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காட்டிற்குள் முதலில் புற்கள், மற்ற சிறு செடிகள் நடப்பட்டன. வனத்திற்குள் இருக்கும் எட்டு குளங்களில் ஏழு தவளைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பறக்கும் தவளை, பச்சைத் தவளை போன்றவை இங்கு வாழ்கின்றன. பாம்புகளுக்காக உருவாக்கப்பட்ட பசுமைத் தீவு உள்ளது. பறவைகளுக்காக பழமரங்களும் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. காடு இயற்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இங்கு பயன்படுத்தப்படுவதில்லை.
விருந்தாளிகள் மரத்தில்
இருந்து விழும் சுள்ளிகள் கூட அப்படியே கிடக்கும். அங்கு நுண்ணுயிரிகள் உருவாகி மண்ணில் விழுபவற்றை மரங்களுக்கு உரமாக மாற்றிக் கொடுக்கின்றன. மலை அணில், மலை வாழ் இருவாயன் பறவை போன்ற பறவையினங்கள் இங்கு தினம் வரும் விருந்தாளிகள். வண்ணத்துப்பூச்சிகளுடன் குருவிகளும் இங்கு வந்து செல் கின்றன. பழமரங்கள் இருப்பதால் இரவு நேரத்தில் வௌவால்கள் வருகின்றன. ராஜநாகம் உள்ளிட்ட பல பாம்பினங்கள் வாழ உகந்த சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாதாளத்தவளை மண்ணிற்கடியில் மட்டுமே வாழும் இயல்புடைய அரியவகை பாதாளத்தவளைகள் (Velvet frog) இங்கு காணப்படுகின்றன. இவை ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கத்திற்காக மண்ணிற்கு மேல் வரும். அமைதியுடன் வாழும் வன உயிரினங்களுக்குத் தொல்லை ஏற்படாமல் இருக்க புல்பேந்திரன் எப்போதேனும் ஒரு முறை மட்டுமே காட்டிற்குள் நுழைந்து பார்த்துவிட்டுச் செல்கிறார். பயிற்சி வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு இவர் சூழல் வகுப்புகள் எடுக்கிறார்.
காடு விட்டு நாட்டிற்குள் புலிகள் வந்தால் வனத்துறையினர் இவரது உதவியைத் தேடுவர். இடுக்கி மாவட்டத்தின் வன நிபுணராக இருக்கும் இவர் அடிமாலி வனத்துறையின் பாம்பு மீட்பவராக (snake rescuer) செயல்படுகிறார். கேரள அரசின் வனமித்ரா, 2021ல் பரிஸ்திதி மித்ரா விருதுகளைப் பெற்றுள்ளார். இப்படி ஒரு காடு ஊருக்கு ஒன்று இருந்தால் காலநிலை மாற்றத்தினால் சூடாகும் பூமி இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்கமாக மாறும் என்பதில் ஐயமில்லை.